Politics

இரவோடு இரவாக பெரியார் ஈவெரா சாலை என பெயர் மாற்றம்: வலுக்கும் திமுக உள்ளிட்ட கட்சியினரின் கண்டனக் குரல்!

சென்னை- பூந்தமல்லியை இணைக்கும் ஈ.வெ.ரா பெரியார் சாலை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆனது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னை ஜீரோ பாயிண்டிற்கும் பூந்தமல்லிக்கும் இடையே சாலை உருவாக்கப்பட்டு அதற்கு கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் 1979-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடிய அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அந்த சாலைக்கு ஈ.வெ.ரா பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்தார்.

Also Read: பெரியாரை தொடர்ந்து அண்ணா சாலை, காமராஜர் சாலை பெயர்களையும் மாற்றுவதா? வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்!

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் வைத்த பெயருக்கு பதிலாக மீண்டும் ஆங்கிலேயர்கள் வைத்த கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன அறிக்கையை விடுத்த நிலையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்ட பெயர் பலகையில் கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோட் என்ற பெயரை மட்டும் கருப்பு மை பூசி அழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

பெயர் பலகை விவகாரத்தில் மவுனம் காத்து வந்த தமிழக அரசு இதுவரை எவ்வித பதிலும் அளிக்காமல் பொறுமையாக இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் நேற்று இரவு த.பெ.தி.கவினர் கிராண்ட் டிரங்க் ரோடு என்ற பெயரை மறைத்து ஈவெரா பெரியார் சாலை என்ற பெயரில் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “யாரை திருப்தி செய்ய பெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம்?”: எடப்பாடி அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம் !