Politics

“இந்தியாவில் ரத்தக்களறியை உருவாக்க முயற்சிக்கும் இந்துத்வ சக்திகள்” - வைகோ எம்.பி குற்றச்சாட்டு!

சாமானிய மக்களின் மனதில், இஸ்லாமியர்களின் கோரிக்கை நியாயமானதுதான் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது வைகோ கூறியுள்ளார்.

அதில், “தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பெறப்பெட்ட 2 கோடியே 5 லட்சம் கையெழுத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளோம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் திரும்பப் பெற மாட்டோம் என்று பிரதமர் மோடி பேசுகிறார். எரிமலையின் ஓரத்தில் உட்கார்ந்து பிரதமர் மோடி மகுடி வாசித்துக் கொண்டிருக்கிறார். எரிமலை எப்போது வெடிக்கும் என்று தெரியாது.

சென்னையில் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கட்டுபாட்டுடன் கலந்துகொண்டனர். சாலையில் கிடந்த பொருட்களையும் அப்புறப்படுத்திவிட்டு சென்றனர். இஸ்லாமியர்களின் கோரிக்கை நியாயமானது என்று பொதுமக்கள் மனதில் எண்ணம் ஏற்பட்டு உள்ளது.

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறது. இந்தியாவில் ஒரு ரத்தக்களறியை உருவாக்கி இந்து, முஸ்லிம்களைப் பிரிக்க இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. அது ஒருபோதும் நடக்காது. இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், சீக்கியர்கள் என எல்லா தரப்பினரும் இஸ்லாமியர்களுடன் சகோதரர்களாகத்தான் இருப்பார்கள். தமிழக வரலாற்றில் நடக்காத ஒரு போராட்டத்தை நடத்தி உள்ளனர்” என வைகோ கூறியுள்ளார்.

Also Read: “ஹிட்லர் செய்ததுபோல, நம்மையும் வதைமுகாமில் அடைப்பார்கள்” - எச்சரிக்கும் துரைமுருகன்!