Politics

“வேலைவாய்ப்பை உருவாக்க என்ன செய்தார் எடப்பாடி பழனிசாமி?” - திருநாவுக்கரசர் எம்.பி., கேள்வி!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள மக்கள் பா.ஜ.க-வை ஆட்சியைவிட்டு நிராகரித்துள்ளனர். பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் சரத் பவாரின் கட்சியை உடைத்து அதிலிருந்த உறுப்பினர்களை இழுத்து பா.ஜ.க ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகத்திற்க்கு எதிரானது.

மகாராஷ்டிர ஆளுநர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளது கண்டனத்திற்குரியது. பெரும்பான்மை இல்லாமல் பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ளது. எந்த நேரத்திலும் பா.ஜ.க - அஜித் பவார் கூட்டணி ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் தேர்வு உள்ளிட்டவற்றை நேரடித் தேர்தலாக அறிவித்திருந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு தோல்வி பயத்தால் கவுன்சிலர்கள் மூலமாக மறைமுகமாகத் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. எந்த மாவட்டத்திலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.

பா.ஜ.க ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 300க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு திருப்பித் தராமல் மண்னோடு மண்ணாக அழிந்துவிட்டன.” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.