Politics

“என் தொகுதி மக்களின் மனுக்களை அ.தி.மு.க அமைச்சர்கள் நிராகரிக்கின்றனர்”- தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

தமிழக அரசின் சிறப்பு மக்கள் குறைதீர் முகாமில் தனது தொகுதிக்குட்பட்ட மனுக்களை நிராகரிப்பதாக அணைக்கட்டு தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் தமிழக அரசின் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்றார். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய அணைக்கட்டு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், அரசு விழாக்களில் தன்னை புறக்கணிப்பதாகவும், பொதுமக்கள் குறைகளை தீர்க்க மனு அளிக்கும்போது, தனது தொகுதிக்குட்பட்டோரின் மனுக்களை நிராகரிப்பதாகவும் அமைச்சர் மீது குற்றம்சாட்டினார்.

மனு அளிக்க அலைக்கழிக்கப்பட்டு வரும் பெண்ணையும் மேடையேற்றி நந்தகுமார் எம்.எல்.ஏ அ.தி.மு.க அமைச்சர் மீது அதிரடியாக குற்றம்சாட்டியதால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து நந்தகுமார் எம்.எல்.ஏ பேசும்போது, “பலரின் மனுக்களை பெறும் அமைச்சர், என் தொகுதிக்கு உட்பட்டவர்களின் மனு மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதில்லை. மகனுடன் வந்த கைம்பெண்ணுக்கு 4 மாத காலமாக பணம் தரவில்லை. இதனால் அவருடன் சேர்ந்து மேடையேறி கேள்வி எழுப்பினேன். அதற்கு அமைச்சர் பதில் சொல்லாமல் கோபமடைந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல, தி.மு.க ஆட்சியில் வழங்கிய முதியோர் உதவித் தொகையை அ.தி.மு.க நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ.