Politics

“டெங்குவால் உயிரிழப்பு இல்லை எனச் சொல்லும் அமைச்சர் செய்தித்தாள் படிக்கிறாரா?” - துரைமுருகன் கேள்வி!

தி.மு.க பொருளாளர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சத்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்திற்கு சென்று வந்திருக்கிறேன். நிச்சயம் தி.மு.க வெற்றிபெறும்” என உறுதி தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “அண்மைக்காலமாக முதலமைச்சர் தனிநபர்களைத் தாக்கிப் பேசுகிறார். முதல்வர் என்ற இடத்தில் இருப்பவர் தனிநபர்களைத் தாக்கிப் பேசுவது அந்த பதவிக்கு அழகு அல்ல.

தமிழகம் முழுவதும் டெங்கு பரவிவரும் நிலையில் சுகாதாரத்துறை என்பது இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை என அமைச்சர் சொல்கிறார். ஆனால் பத்திரிகைகளில் தினந்தோறும் உயிரிழப்பு குறித்த செய்தி வருகிறது. அமைச்சர் செய்தித்தாள்கள் படிக்கிறாரா எனத் தெரியவில்லை.” எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.சி.சண்முகத்தின் டாக்டர்.எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவருக்கு எதற்கு கெளரவ டாக்டர் பட்டம் எனக் கேள்வி எழுப்பினார்.