Politics

சிதம்பரம் விஷயத்தில் பா.ஜ.க சர்வாதிகாரப்போக்கை கையாள்கிறது - உண்மையை விளக்கும் கே.எஸ் அழகிரி

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீதான வழக்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், ''ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மீது முதல் தகவல் அறிக்கை இல்லை. அது இல்லாமல் சிதம்பரத்தை கைது செய்வதோ அல்லது அவருக்கு ஜாமீன் மறுப்பதோ சட்டத்திற்கு புறம்பானது.

உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். உச்சநீதிமன்றத்தில் தான் சிதம்பரம் இருந்திருக்கிறார். ஆனால் அவர் வீட்டுக்கு சென்று அவர் இல்லத்திலே இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டை வைத்து அவர் தலைமறைவாகி விட்டார் என்று ஒரு உருவகத்தை அவர்கள் தோற்றுவிக்கின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் என்ன வேடிக்கை என்றால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை அடுத்த அமர்வுக்கு மாற்றியது. ஆனால் அந்த அமர்வில் இருந்த நீதிபதி, மீண்டும் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கை விசாரிக்க அனுப்புகிறார். சிதம்பரம் மீது பா.ஜ.க-வினர் குறி வைக்கிறார்கள். எனவே இதில் தவறான தீர்ப்பு வழங்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான் 2 அமர்வுகளும் அந்த வழக்குகளை விசாரிக்க தயங்குகின்றன.

இதிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பா.ஜ.க ஒரு சர்வாதிகார இலக்கை நோக்கி செல்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இதனை மேற்கொண்டுள்ளனர். ஜனநாயகம் நிச்சயம் வெற்றி பெறும்'' என தெரிவித்தார்.