Politics

சோன்பத்ரா விவகாரம்: பா.ஜ.கவுக்கு சரமாரி கேள்வி: பிரியங்கா காந்திக்கு ஆதரவு -கொதித்தெழுந்த மம்தா பானர்ஜி!

உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் கிராம மக்களுக்கும், கிராம தலைவருக்கும் இடையே ஏற்பட்ட நிலத் தகராறில் ஆத்திரமடைந்த கிராமத் தலைவர் தனது ஆதரவாளர்களை ஏவி அப்பகுதி மக்களை துப்பாக்கியால் சுட உத்தரவிட்டிருக்கிறார்.

துப்பாக்கிச்சூட்டால் 10 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட கிராம மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக சோன்பத்ராவுக்கு விரைந்த கிழக்கு உ.பி. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை பல கிலோ மீட்டருக்கு முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதிக்காத கொந்தளிப்பில் நிகழ்விடத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் பிரியங்கா. இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். மிசாபூரில் அடைத்து வைக்கப்பட்ட போதும் பிரியங்கா காந்தி தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி மறுநாள் பிற்பகல் போலீசார் விடுவித்தனர். பின்னர் கிராம மக்களே பிரியங்காவை காண விருப்பம் தெரிவித்து சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், சோன்பத்ரா சம்பவம் தொடர்பாக பேசியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, யோகி ஆதித்யநாத் உ.பி. மாநிலத்தில் பதவி ஏற்றது முதலே அங்கு சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மேற்கு வங்கத்தில் ஏதேனும் கலவரம் வந்தால் மட்டும் உண்மை அறியும் குழுவை அனுப்பும் பா.ஜ.க, உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரம், பிரச்னை குறித்து தெரிந்துகொள்ள நாங்கள் குழுவை அனுப்பினால் மட்டும் ஏன் தடுக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

நியாத்திற்காக பிரியங்கா காந்தி தர்ணாவில் ஈடுபட்டத்தில் எந்த தவறும் இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.