ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
Politics

பட்ஜெட்டில் சொல்லி இருப்பது அனைத்தும் பொய்.. பா.ஜ.க நம்மை ஆபத்தில் தள்ளும் : ப.சிதம்பரம் ஆவேசம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 5-ஆம் தேதி, 2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், புள்ளி விபர தவறுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், பட்ஜெட் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், பல்வேறு விவரங்களையும் குளறுபடிகளை எடுத்து உரையாற்றியுள்ளார். அவரது பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் பேசுகையில், “ நாட்டின் மொத்த வருமானம் குறித்து பட்ஜெட்டில் எந்தவித தகவலும் இடம்பெறவில்லை. நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்களும் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் குறித்து எதுவுமே இல்லை” என குற்றம் சாட்டினார்.

மேலும், “ வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு சிறந்த உதாரணம் ஒன்று சொல்லலாம். அதாவது 62 ஆயிரம் 'கலாசி' பதவிகளுக்கு 82 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் முதுகலை பொறியியல் பட்டதாரிகள் 4 லட்சம் பேர், அதில் 40 ஆயிரம் பேர் எம்.இ. படித்தவர்கள். இத்தகைய பொருளாதாரத்தில் தான் மோடி அரசு தனது மக்களை வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி 2020-ல் நாட்டின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு இருக்கும்? என்பதைக் கூட பா.ஜ.க அரசால் கணிக்க முடியவில்லை. நாட்டின் பொருளாதார கட்டமைப்பை சரி செய்வதற்கு எந்த வித அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

இந்தியாவின் கிரிக்கெட் அணி கிரிக்கெட்டில் தோற்றுப் போனதற்கு வருத்தப்படுகிறோம். கிரிக்கெட் அணி மட்டுமல்ல, நமது ஜனநாயகமும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. என்பதனை புரிந்துக் கொள்ளவேண்டும்.

இது பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தர ஏஜென்சிகள், சர்வதேச அமைப்புகள் இந்தியாவில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையால், பொருளாதார விஷயங்களில் பின்வாங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. மேலும் இதை மோடி தலைமையில் ஆனா பாஜக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் இவ்வாறு பேசியுள்ளார்.