Politics

ரவீந்திரநாத் குமாருக்கு செக்மேட் : தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்பட்டது.

இதில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 தொகுதிகளில் வென்று மகத்தான வெற்றியை பெற்றது. அ.தி.மு.க 1 தொகுதியில் மட்டும் வென்றது.

தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளார். இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு தேனியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றியதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்த நிலையில், ரவீந்திரநாத் குமாரின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனியைச் சேர்ந்த மிலானி என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், தனக்கு வாக்களிக்கச் சொல்லி வாக்காளர்களுக்கு அ.தி.மு.க-வின் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கோடிக் கணக்கில் பணம் பட்டுவாடா செய்துள்ள வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது என தெரிவித்துள்ள மனுதாரர், முறைகேட்டில் ஈடுபட்டும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் தேர்தலில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஆகையால், ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.