Politics

“கிரண்பேடிக்கு விளம்பர வியாதி இருக்கிறது” - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சனம்!

சென்னையில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்னைக்கு மக்களின் சுயநலமும், கோழைத்தனமும், ஊழல் அரசியலுமே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியிருந்தார்.

கிரண் பேடியின் தமிழக மக்கள் குறித்த இந்தப் பேச்சுக்கு சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அவர் ராஜினாமா செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினார். தொடர்ந்து, அரசுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் கிரண் பேடியை குடியரசுத் தலைவர் திரும்பப்பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினார் மு.க.ஸ்டாலின்.

இதைத்தொடர்ந்து, கிரண் பேடியின் பேச்சைக் கண்டித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என தி.மு.க அறிவித்தது. இதற்கிடையே, தண்ணீர் பிரச்னை பற்றி நான் கூறியது எனது கருத்தல்ல மக்கள் கருத்தே என கிரண் பேடி பின்வாங்கினார்.

புதுச்சேரி தி.மு.க முன்பே அறிவித்தபடி இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. 500-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் போராட்டத்தில் பங்கேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “எந்த ஆதாரமும் இல்லாமல் அரசியல் தலைவர்கள், மக்கள் மீது கிரண் பேடி குற்றம்சாட்டியுள்ளார். தேவையில்லாமல் மற்ற மாநில விவகாரங்களில் தலையிட்டு, அவரே அவப்பெயரை பெற்றுக் கொண்டுள்ளார். எப்போதும் தன்னை விளம்பரம் செய்துகொள்ள வேண்டும் எனும் வியாதி கிரண் பேடிக்கு இருக்கிறது” என விமர்சித்துள்ளார்.