Politics

பா.ஜ.கவின் தேசிய தலைவர் தேர்வுக்கு முன் தேர்தல் தோல்வி அடைந்த மாநில தலைவர்கள் மாற்றமா?

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா புதிய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பா.ஜ.க.வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற வழிமுறை பின்பற்றப் பட்டுவருகிறது. எனவே, உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்றிருப்பதால் கட்சி தலைவராக வேறு நபர் நியமிக்கப்படுவார். முன்னாள் மத்தியமைச்சர் ஜே.பி.நட்டா கட்சி தலைவராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் பாஜகவின் உள்கட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் மேலும், தமிழகம் உள்பட வெற்றி கிடைக்காத மாநிலங்களின் பா.ஜ.க தலைவர்களை மாற்றுவது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மகாராஷ்டிரா, ஹரியான, ஜார்காண்ட் மாநில தேர்தல்கள் வர இருப்பதால், புதிதாக பொறுப்பேற்கும் யாரும் உடனடியாக முழுத் திறனை வெளிக்காட்ட முடியாது என அமித் ஷா நினைப்பதாகவும், அதனால் தேர்தல் முடியும் வரை அவரே பா.ஜ.க தலைவராக நீடிப்பார் எனவும் பா.ஜ.க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உள்கட்சி தேர்தல்கள் டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. அதன் பின்னர் தான் பா.ஜ.க.விற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.