Politics

விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளேன் - நடிகர் பிரகாஷ்ராஜ் தகவல்

நடிகர் பிரகாஷ்ராஜ் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பி.சி. மோகன் வெற்றிபெற்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"கடந்த 6 மாதங்களாக பெங்களூர் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய தலைவர்களை எதிர்த்தேன். ஆனால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன்.

பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். சுயேச்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக சொல்கிறார்கள். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

இன்னும் ஒரு வருடத்தில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வருகிறது. அதில் எங்களது வேட்பாளர்களை களம் இறக்கி ஆதரவை பெருக்கப் போகிறேன். சினிமா எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிக்கவும் இருக்கிறேன். அரசியல் கட்சி நடத்த பணம் தேவைப்படுவதால் படங்களில் நடிப்பேன்."இவ்வாறு அவர் கூறினார்.