Politics

மோடியை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க விரும்பியவர் வாஜ்பாய் - யஷ்வந்த் சின்ஹா

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கின்றன. இந்நிலையில் நாளை 6ம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

இதற்கிடையில் மத்திய பிரதேச மாநில போபாலில் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜகவின் முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹா.

அப்போது பேசிய அவர், 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மதக் கலவரத்திற்கு பிறகு, அப்போதைய முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என எண்ணினார் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். ஒருவேளை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்தால் குஜராத் அரசை கலைக்கவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அதே ஆண்டு கோவாவில் நடந்த பாஜகவின் செயற்குழு கூட்டத்தின் போது, மோடியை நீக்குவதற்கான வாஜ்பாயின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் முன்னாள் உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி.

மோடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என வாஜ்பாயிடம் கூறியுள்ளார் அத்வானி. ஆகையால் தனது முடிவை வாஜ்பாய் கைவிட்டார் என யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

இந்நிலையில், தனது அரசையும், பதவியையும் காப்பாற்றி அத்வானியையே எட்டி உதைத்து இன்று பிரதமராக மோடி பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.