Politics

ஓ.பி.எஸ் மீது ஏன் நடவடிக்கை இல்லை? கேள்வி எழுப்பும் அதிருப்தி அ.தி.மு.க எம்.எல்.ஏ 

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக சபாநாயகர் தனபால் மற்றும் தமிழக அரசு 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் தரப்பில் நோட்டீஸை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தடை குறித்து அ.தி.மு.க அதிருப்தி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் “ சபாநாயகர் நடவடிக்கை செல்லாது என உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தீர்ப்பினால் நீதி வென்றுள்ளது. இந்த ஆட்சிக்கு எதிராக ஒ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவருடன் 11 எம்.எல்.ஏ-க்கள் இந்த ஆட்சிக்கு எதிராக செயல்பட்டார்கள். அவர்கள் சட்டமன்றத்திற்குள்ளேயே ஆட்சியை எதிர்த்தார்கள். ஆனால் அவர்களுக்குப் பரிசாக அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார்கள். பிரிந்தவர்கள் வருகிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால், ஆட்சிக்கு உண்மையாகப் பாடுபட்ட எங்களுக்கு நோட்டிஸ் கொடுத்தார்கள். இது வருந்தத் தக்க விசயம். அவர்கள் மாற்று சக்திகளுக்குப் பயந்து செயல்பட்டார்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். இதைக் கேட்டதற்குத் தான் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்களின் ஒருசிலர் சுயலாபத்திற்காகச் செயல்படுகிறார்கள்” என கூறினார்.