Politics

பிரதமர் மோடி பேசுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி பேட்டி  

ஆசிய தடகள போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையின் சார்பாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

மம்தா பானர்ஜி கட்சியில் உள்ள எம்எல்ஏ க்கள் என்னுடைய தொடர்பில் உள்ளனர் என பிரதமர் கூறியிருக்கிறார் , பிரதமரே வெளிப்படையாக குதிரைப் பேரம் பேசுவது வருத்தமாக உள்ளது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

பிரதமர் மோடி ஒரு பொதுக்கூட்டத்திற்கு 10 கோடி ரூபாய் செலவு செய்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது மோடியின் வாகனத்திற்கு பின்னால் 2000 வாகனங்கள் செல்கிறது. ஆனால், தேர்தல் பிரசாரத்தின் போது 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இதை எல்லாம் பார்த்தால் தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்ற கேள்வி எழும்புகிறது.

வாக்கு எண்ணிக்கை கணக்கிடுவது தள்ளி போவதால், தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல .

சிலை கடத்தல் தடுப்பு விவகாரத்தில் பொன்மாணிக்கவேலுக்கு உதவவில்லை என மீண்டும் நீதிமன்றம் சாடியுள்ளது. ஆளும்கட்சியினருக்கு சிலைகடத்தலில் தொடர்பு இருப்பதாலேயே அரசு இவ்வாறு மெத்தனமாக செயல்படுகிறது.

அ.தி.மு.க. அரசு மேலும் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை போதுமான அளவிற்கு திறக்கவில்லை . 25 டன் கொள்முதல் செய்வது வழக்கம் ஆனால் 15 லட்சம் டன் நெல் கொள்முதல் மட்டுமே செய்து இருக்கிறது.

கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் எப்படி வருமோ அதே போல அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆளுங்கட்சி தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.