M K Stalin
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை... மெட்ரோ இரயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.6.2025) சென்னை, கிண்டி, கத்திப்பாரா பகுதியில் நடைபெற்று வரும், வழித்தடம் 5 - மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ இரயில் கட்டுமானப் பணிகளை, பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, வழித்தடம் 3 - மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது முதலமைச்சர் அவர்கள் மின்தூக்கி மூலம் உயரே சென்று, உயரத்திலிருந்து கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
கத்திப்பாரா பகுதியில் ஏற்கனவே அமையப் பெற்றிருக்கும் வழித்தடம் 1. வழித்தடம் 2 மற்றும் கத்திப்பாரா மேம்பாலம் உள்ளடக்கிய சந்திப்பில் சமச்சீர் காண்டிலீவர் (Balance Cantilever) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதிலுள்ள சவால்கள் குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் (திட்டங்கள்) முதலமைச்சர் அவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
சென்னை மெட்ரோ இரயில் வழித்தடம் 5 பற்றிய விவரங்கள் :
இவ்வழித்தடம், பட் ரோட்டினை கடந்தபின், கத்திப்பாரா சென்றடைந்து, பின்னர் உள்வட்ட சாலை வழியாக மேடவாக்கம் பிரதான சாலையை அடைகிறது. கத்திப்பாரா பகுதியில் நெடுஞ்சாலை துறையின் மேம்பாலம், மெட்ரோ வழித்தடம்-1 மற்றும் 2 அமையப் பெற்றுள்ளமையால், சமச்சீர் காண்டிலீவர் எனப்படும் கட்டமைப்பின் கீழ் சாரக்கட்டு அமைப்புகள் ஏற்படுத்தாமல் கட்டுமானத்தை செயல்படுத்தும் ஒரு சிறப்பு கட்டுமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
கத்திப்பாரா பகுதியில் 125 மீட்டர் ஆரம் வளைவுடன் 5 தொடச்சியான BCM (Balance Cantilever Method) ஸ்பான்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. தண்டவாளங்கள் தரை மட்டத்திலிருந்து 31 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது.
பின்னர் அவைகள் சுரங்கப்பாதை வழியாக தரையை அடைந்து, அங்கிருந்து கத்திப்பாரா மேம்பாலம், மெட்ரோ வழித்தடம் 1 மற்றும் 2 வழியே செல்கிறது. மொத்த BCM நீளம் 413 மீட்டர் ஆகும், மொத்தம் 6 தூண்கள் மற்றும் 10 தூண்கள் இடையிலான கூறுகள் கொண்டதாகும்.
இதுவரை 80 கூறுகளில் 30 கூறுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் மாதத்திற்குள் ஆலந்தூர் வரையிலான வழித்தடப் பகுதி முடிவுறுமென கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவன உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !