M K Stalin

“அநீதியைத் தழுவிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு இரண்டாவது முறையாகவும் சூடு" : மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க ஊழலை சுட்டிக்காட்டும் வகையில் சட்டப்பேரவையில் குட்காவை காண்பித்தது உரிமை மீறல் இல்லை என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக்காட்டி 18 எம்.எல்.ஏக்களுக்கும் அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு இன்று இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பான விசாரணைகள் வேகமாக நடைபெற்று, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (24-9-2020) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு :

"தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அ.தி.மு.க ஆட்சியாளர்கள் தங்களின் சுயலாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தமிழகம் முழுவதும் தாராளமாக விற்பனை செய்ய அனுமதித்ததை அம்பலப்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் குட்கா பொட்டலங்களை எடுத்துக்காட்டிய திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்து, நீதியை நிலைநாட்டிய நிலையில், இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கும் உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது!

அநீதியைத் தழுவிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு, நீதிமன்றம் இரண்டாவது முறையாகவும் சூடு போட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இப்போதும் பெருமளவில் நடைபெற்று வருவதை “டைம்ஸ் ஆஃப் இந்தியா” அண்மையில் விரிவாக வெளியிட்டுள்ளது.

குட்கா ஊழல் தொடர்பான விசாரணைகள் வேகமாக நடைபெற்று, பொதுநலனைக் காப்பாற்றும் வகையில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: குட்கா வழக்கு: சிபிஐ-ஐ நெருங்கவிடாமல் தடுக்கும் உயர்மட்ட சதி எது? -அதிமுக, பாஜக அரசை சாடும் மு.க.ஸ்டாலின்