M K Stalin

கடலூர் விபத்தில் 9 பேர் பலி: தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டியது அரசின் கடமை - மு.க.ஸ்டாலின்

காட்டுமன்னார் கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் தொழிலாளர்கள் 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இடைநாறூர் என்ற பகுதியில் 10க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் குடிசை தொழிலாக இயங்கி வருகின்றன. இதில் ஒரு ஆலையில் இன்று பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் கண்ணிமைக்கும் நேரம் ஆலை கட்டடம் முற்றிலும் வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில், காந்திமதி, மலர்கொடி, லதா, ராசாத்தி மற்றும் சித்ரா ஆகிய 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நால்வரது உயிரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே பிரிந்தது.

இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்கக்கோரி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குறுங்குடி கிராமத்தின் அருகே உள்ள இடைநாறூர் என்ற பகுதியில் பட்டாசு தயாரிப்பதைக் குடிசைத் தொழிலாகச் செய்து வந்துள்ளனர். இதில் கனகராஜ் என்பவரின் பட்டாசு தயாரிக்கும் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர் பலியான செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

சம்பவ இடத்திலேயே 5 பேர் மரணம் அடைந்தார்கள் என்றும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 4 பேர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் சொல்கின்றன.உயிரிழந்த 9 பேரும் பெண்கள். அதில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக நான்கு மாதங்கள் வருமானம் இல்லாமல் இருந்த தொழிலாளர்கள், தொழிலை மீண்டும் தொடங்கிய அன்றே இத்தகைய விபத்தில் சிக்கியது வேதனை தருவதாக உள்ளது. முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட்ட பட்டாசு உற்பத்தியாக இருந்தாலும் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் அனுமதிக்க மாட்டோம்” : மு.க.ஸ்டாலின் உறுதி!