M K Stalin

“முன்களப் பணியாளர்களையோ, அரசு ஊழியர்களையோ இழக்கும் நிலை இனியும் ஏற்படக்கூடாது”- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் உட்பட 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தாமோதரன் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இந்தச் செய்தி முன்களப்பணியாளர்களையும், மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், முதல்வரின் தனிச் செயலாளர் தாமோதரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தி விவரம் பின்வருமாறு :

“முதலமைச்சர் அலுவலக தனிச் செயலாளர் திரு. தாமோதரன் கொரோனாவால் மறைவெய்தி இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைமைச் செயலகம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

"பரிசோதனை மற்றும் புதிய கொரோனா நோய்த் தொற்று குறித்த தினசரி சதவீத வாரியான விவரங்கள் ஏதும் இல்லாத நிலையில் சென்னையில் "நோய்த் தொற்று வளைவில்" (Epi curve) அசாதாரணமாக திடீரென்று "நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின்" எண்ணிக்கை குறைவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று தொற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் பிரப்தீப் கவுர் அவர்கள் கூறியிருப்பது மிகவும் உன்னிப்புடன் கவனிக்கத்தக்கது. இதற்கு உரிய விளக்கத்தை அளிப்பதோடு - கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கையில் அரசு மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்பட கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுய பாதுகாப்பிற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களும் வழங்கிட வேண்டும் எனவும், இனி ஒரு முன்களப்பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஆன்லைன் கல்வி மூலம் மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதா?” -அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!