M K Stalin

தினம் ஒரு திருக்குறள் சொல்ல வேண்டும் : அசத்தும் நீதிபதி - மு.க.ஸ்டாலின் பாராட்டு!

வழக்கறிஞர்கள் கோர்ட்டில் ஒரு குறளை மனப்பாடம் செய்து அதற்கான பொருளுடன் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கூற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இலக்கிய ஆர்வலர் பழமலை என்பவரின் மகனும், செசன்சு நீதிபதியுமான செம்மல், ‘திருக்குறள் முனுசாமி‘ என்ற புத்தகத்தை சமீபத்தில் எனக்கு பரிசாக வழங்கினார். அதை படித்தபோது, திருக்குறளை பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், நீதிபதி மகாதேவன் ஆகியோர் கூறியது நினைவிற்கு வந்தது.

தமிழர்களாகிய நாம் குறைந்தபட்சம் 51 குறள்களையாவது, மனப்பாடமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதன்படி முதல் கட்டமாக, ‘சொல்லுவது சொல்லை பிரிதோற்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து’ என்ற குறளை நான் மனப்பாடம் செய்துள்ளேன்.

இதைப்போல வக்கீல்களும் இனி தினந்தோறும் இந்த கோர்ட்டில் ஒரு குறளை மனப்பாடம் செய்து அதற்கான பொருளுடன் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பகல் 1.30 மணி அல்லது மாலை 4.45 மணியளவில் கூற வேண்டும்'' இவ்வாறு கூறப்பட்டுள்ளது. நீதிபதியின் இந்த அறிவிப்பிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் தினமும் வழக்கறிஞர் ஒரு திருக்குறள் சொல்ல வேண்டும் என்று மாண்புமிகு நீதியரசர் சுவாமிநாதன் அவர்கள் அறிவித்திருப்பதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னோடியான இந்த நற்செயல் பரவிட வேண்டும் என விரும்புகிறேன்!'' எனத் தெரிவித்துள்ளார்.