M K Stalin

“நெக்ஸ்ட் தேர்வை தமிழகம் ஒருபோதும் ஏற்கக்கூடாது” : மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு மாணவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ‘நெக்ஸ்ட்’ (National Exit Test) என்ற பெயரில் தேசிய அளவில் பொதுத் தேர்வு நடத்தப்படவிருக்கிறது.

இந்நிலையில், நெக்ஸ்ட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறவேண்டும் என்று சட்டப்பேரவையில் வலியுறுத்திய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசிய மு.க.ஸ்டாலின், தேசிய மருத்துவர்கள் கழக மசோதாவை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும். அதை ஒருபோதும் ஏற்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

அவர் பேசும்போது, “மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையில், நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.

மேலும் மருத்துவப்படிப்புகள் முடியும் சமயத்தில் நடத்தப்படும் நெக்ஸ்ட் தேர்வுகளை அரசே எடுத்து நடத்தும் என தெரிவித்திருந்தது. அவ்வாறு தேர்வுகள் நடத்தப்படுவது, மாநில அரசின் கொள்கைகளுக்கு முரண்பாடாக இருக்கும்; மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் விதத்திலும் அமையும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மருத்துவக் கல்லூரிகள் அதிகம் உள்ளன. ஆனால், தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர்களாக தமிழகத்தைத் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. 'நெக்ஸ்ட்’ தேர்வின் மூலம் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு இயக்கக்கூடிய சூழல் ஏற்படும். எனவே, நெக்ஸ்ட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும். நெக்ஸ்ட் மசோதாவை தமிழக அரசு எதிர்க்கவேண்டும்.” என வலியுறுத்தினார்.