M K Stalin

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு அரசியல் சட்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி : ஸ்டாலின் பேச்சு!

நீட் தேர்வால் கடந்த மூன்றாண்டுகளில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முழு மனதாக நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவர் அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இரண்டரை ஆண்டு காலம் ஆன நிலையில் இதுகுறித்த எந்த பதிலையும் மத்திய அரசு சொல்லவில்லை. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், அந்த 2 மசோதாக்களும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நீட் விலக்கு மசோதா மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய அவர், “நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது” என மத்திய அரசின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், “மசோதா தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இணையாக சட்டமன்றத்திற்கும் உள்ளது. நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்தது அரசியல் சட்ட அமைப்புக்கு இழைக்கப்பட்ட அநீதி.

நீட் விலக்கு விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளை அவமதித்த மத்திய அரசைக் கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.