India

தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!

பாஜக ஆளும் உத்தர பிரதேசம் மாநிலம் பதாவுன் (Budaun) என்ற பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் இந்த சிறுமி கடந்த ஜூன் 9-ம் தேதி தனது ஆண் நண்பருடன் வீட்டை வெட்டு வெளியேறியுள்ளார். அப்படி வெளியேறிய சிறுமியை பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உ.பி. போலீசார் தீவிரமாக தேடியுள்ளனர்.

அப்படி தேடும்போது அந்த சிறுமி இரயிலில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 2 வாரங்களுக்கு பிறகு சிறுமி தமிழ்நாட்டில் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து உ.பி. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் வந்து சிறுமியை இரயிலில் அழைத்து சென்றனர்.

இந்த சூழலில் இரயிலில் போலீசாருடன் தனியே சென்ற சிறுமிக்கு துணை ஆய்வாளர் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். பின்னர் ஜூன் 21-ம் தேதி சிறுமியுடன் உ.பி. திரும்பிய அந்த துணை ஆய்வாளர் காதர் சவுக் (Kadar Chowk) பகுதியில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்று பூட்டி வைத்து மிரட்டி தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் இதனை வெளியே சொன்னால், வழக்குப்பதிவு செய்து சிறுமியை சிறையில் அடைத்து விடுவதாகவும், சிறுமியின் பெற்றோரை எதாவது செய்து விடுவதாகவும் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து ஜூன் 23-ம் தேதி சிறுமி OSC என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்துக்கு (One Stop Centre) அழைத்துச் செல்லப்பட்டார்.

OSC என்பது பெண்கள் மீதான வன்முறை தாக்குதல் குறித்த ஆய்வு நடைபெறும் இடமாகும். அங்கே சிறுமியை சோதனை செய்தபோது அவர் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியிடம் விசாரித்தபோது, அவர் தன்னை துணை ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

அதன்பேரில் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவையை ஆய்வு மேற்கொண்டு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த சூழலில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி முன் பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்தார். அப்போது இந்த நிகழ்வை கண்டித்த நீதிபதி, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான துணை ஆய்வாளர் இன்னும் கைது செய்யப்படவில்லை. மாறாக அவர் ஷாஜகான்பூரூக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.