India

தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க திட்டம் - சமரசத் தேர்வு திட்டத்தை அறிவித்த உச்சநீதிமன்றம் !

நாடு முழுவதும் லட்சக்கணக்கான வழக்குகள் கீழ் நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றங்கள் வரை தேங்கி கிடக்கின்றன. இந்த எண்ணிக்கையை குறைக்க ஏதுவாக ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்று மாதம் நாடு முழுவதும் சமரசத் தேர்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆலோசனையின் படி தேசிய சட்ட சேவை ஆணைய தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் அறிவித்துள்ளார். இதன் மூலம் தாலுகா நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றங்கள் வரை தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், செக்கு மோசடி வழக்குகள், நுகர்வோர் வழக்குகள், கடன், நிலம் கையகப்படுத்துதல், வணிக வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இந்த திட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எந்தெந்த வழக்குகள் இந்த சமரசத் தீர்வு திட்டத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதை கண்டறிந்து பட்டியலிட வேண்டும். சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு அறிவிக்க வேண்டும். பின்னர் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சமரச தீர்வு முலம் விசாரணை நடத்தப்பட்டு வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: நாடு முழுவதும் சரியும் பாஜகவின் செல்வாக்கு... இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுவது இதுதான் - முரசொலி !