India

அரசின் திட்டங்களை வேண்டும் என்றே தவிர்த்த ஆளுநர்: ஒரு நிமிடத்தில் உரையை முடித்து கொண்ட ஆரிப் முகமது கான்!

இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் இழுத்தடித்து அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

கேரளா மாநிலத்தில் ஆளுநராக இருக்கும் ஆரிப் முகமது கான் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்குத் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அம்மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டமன்ற மரபுப்படி ஆளுநர்தான் கூட்டத் தொடரை தொடங்கி வைத்து உரையாற்றுவது வழக்கம். அதன் படி இன்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சட்டமன்ற கூட்டத் தொடரை தொங்கி வைப்பதற்காக அவைக்கு வந்தார்.

அப்போது அவர் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்து, கேரள அரசு கொடுத்த 64 பக்கத்தில் கடைசி பக்கத்தை மட்டும் வாசித்துவிட்டு தனது உரையை ஒரு நிமிடத்தில் முடித்துக் கொண்டார். ஆளுநரின் இந்த செயல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாநில அரசின் கொள்கை திட்டங்கள் மற்றும் மாநில அரசைப் பாராட்டி இடம் பெற்று இருந்ததால் வேண்டும் என்றே இவற்றை வாசிக்காமல் தனது உரையை முடித்துக் கொண்டுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Also Read: நேதாஜிக்கு சாவர்க்கர் இழைத்த கொடூரமான துரோகம் பற்றி தெரியுமா?