India

”தகுந்த ஆதாரங்கள் இல்லை” : பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாக செயல்படும் டெல்லி காவல்துறை - அதிர்ச்சி தகவல்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பிரஜ் பூஷன் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரிஜ் பூஷனுக்கு எதிராகப் புகார் கொடுத்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியில் பெண் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போதும் ஒன்றிய பா.ஜ.க அரசு பெண் வீரர்களின் குரல்களுக்குக் காது கொடுக்காமல் பிரிஜ் பூஷனை காப்பாற்றவே பார்த்தது. இதனால் போலிஸாரை கொண்டு போராட்டத்தை ஒடுக்கப்பார்த்தது. ஆனால் பெண் மல்யுத்த வீரர்கள் உறுதியுடன் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து.

இதனால் வேறு வழி இல்லாமல் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் மீது POSCOவில் வழக்குப் பதிவு செய்தது. ஆனால் அவரை கைது செய்யப்படவில்லை. இதையடுத்து கடந்த மாதம் பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து, "மல்யுத்தத்திலிருந்து நான் விலகுகிறேன்' என சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க அறிவித்திருந்தார். மேலும் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் தங்களுக்கு ஒன்றிய அரசு கொடுத்த உயர்ந்த விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்.

இந்நிலையில், பிரிஜ் பூஷ்ன் மீதான பாலியல் வழக்கில் தகுந்த ஆதாரமில்லை என கூறி அவர் மீதான POSCO வழக்கை நீக்கக் கோரி டெல்லி காவல்துறை உயர்நீதிமன்றம் சென்றுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு மார்ச் 2 ஆம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: மக்களின் வரிப்பணம் மக்களுக்காக செலவிடப்படுகிறதா? - நிதியை வீண் விரயம் செய்யும் ஒன்றிய பாஜக அரசு!