India

அதானி நிறுவனத்தின் ரூ.12 ஆயிரம் கோடி ஊழலுக்குத் துணைபோகும் மோடி : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!

அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டி இருந்தது.

இந்த குற்றச்சாட்டு இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் கூட எதிர்கட்சிகள் அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல் ஒன்றிய அரசு அதானி மற்றும் அம்பானி ஆகிய நண்பர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், அதானி நிறுவனத்தின் மற்றொரு முறைகேடு வெளியே வந்துள்ளது. அதானி நிலக்கரி நிறுவனங்கள் சந்தை விலையை விடப் பல மடங்கு அதிகமாக வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளனர். இதனால் 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவிற்கு லாபம் ஈட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அதானி ஊழலுக்கு பிரதமர் மோடி துணைபோகிறார் என ராகுல் காந்தி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, "இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது.

அதானி குழுமத்திற்கு எதிராக அரசு ஏன் விசாரணை நடத்தவில்லை?. அதானி நிறுவனத்தின் ஊழலுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் பிரதமர் மோடி. அதானி நிறுவனத்தின் முறைகேட்டால் நாட்டு மக்கள் கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: மகளிருக்கு ரூ.1500 உதவித் தொகை : திராவிட மாடல் அரசை பின்பற்றி தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்!