India

தொடரும் சாதி கொடுமை.. 70 வயது தலித் முதியவரின் தலையில் செருப்பு மூட்டை.. ராஜஸ்தானில் அதிர்ச்சி !

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் பகுதியில் அமைந்துள்ளது துகர் என்ற கிராமம். இங்கு தல்சந்த் சால்வி என்ற 70 வயது முதியவர் வசித்து வருகிறார். தலித் சமூகத்தை சேர்ந்த இவர், கடவுள் பாட்டு பாடல் வந்துள்ளார். அப்போது ஒரு சமூகத்தினரின் கோயில் திருவிழாவின்போது, இவர் பாடல் பாடியுள்ளார். அவ்வாறு பாடிக்கொண்டிருக்கையில், ஏதோ தவறுதலாக கடவுளை பற்றி தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் கோபம் கொண்ட ஊர்மக்கள் அவரை வசை பாடியுள்ளனர். இதனையடுத்து அவரை பஞ்சாயத்துக்கு அழைக்கப்பட்டு ரூ.1,100 அபராதம் விதித்து தண்டனை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரது தலையில் ஊர் மக்களின் செருப்புகள் அடங்கிய மூட்டையை வைத்து அனைவர் முன்பும் மன்னிப்பு கேட்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் அவரும் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் அவரை சரியாகவசைபாடி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இந்த சூழலில் முதியவர் தாக்கப்படும் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாதிக்கப்பட்ட நபரான முதியவர் தல்சந்த் சால்வி வீட்டுக்கு சென்று புகார் கொடுக்க கூறியபோது, அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சமூகத்தை சேர்ந்த கும்பல் இவர் மன்னிப்பு கேட்டபிறகும் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தலித் சமூகத்தை சேர்ந்த அமைப்பினர் அவருக்கு உறுதுணையாக இருந்து புகார் அளிக்க வைத்துள்ளனர். பின்னரே இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை தீவிரமாகி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வெறும் ரூ.15 இருந்த வங்கி கணக்கில் ரூ.9000 கோடி டெபாசிட்.. ரூ.21 ஆயிரம் நண்பருக்கு அனுப்பிய வாடிக்கையாளர்