India

காதலித்து ஏமாற்றியதால் ஆத்திரம்.. காதலனின் திருமணத்தில் காதலி செய்த கலாட்டா.. இறுதியில் நடந்தது என்ன ?

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்ஙரம்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் எடப்பால் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் ஒரே கல்லூரியில் படித்தபோது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கல்லூரி காலத்தில் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் மேற்படிப்பு மற்றும் வேலை ஆகியவை வேறு வேறு இடங்களில் அமைய, இருவரும் தங்கள் காதலை முடித்துக்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு வேறு ஒருவரோடு திருமணம் நடந்து பின்னர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்தும் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் அந்த பெண்ணும் அவர் முன்பு காதலித்த அந்த இளைஞரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அந்த பெண் தனது நிலையைக் கூற தான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும், அந்த பெண்ணை திருமணம் செய்வதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில், திடீரென அந்த இளைஞருக்கு வேறு ஒரு பெண்ணோடு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தநிலையில் திருமணத்துக்கு ஏராளமானோர் வந்துள்ளனர்.

அப்போது தனது உறவினர்கள் 20 பேரோடு அங்கு வந்த இளைஞர் காதலித்த பெண், கல்யாண மண்டபத்தில் கலாட்டா செய்துள்ளார். மேலும், மணக்கோலத்தில் இருந்த தனது காதலரையும் அவர் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்தி அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த பெண் காதலித்த இளைஞர் தனது காதலன் தன்னை தாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதோடு அந்த இளைஞர் தரப்பிலும் அந்த பெண் மற்றும் அவரோடு வந்த அவர்கள் உறவினர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பாலியல் குற்றவாளிக்கு தொடரும் பாஜக அரசின் ஆதரவு.. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அதிரடி தடை.. பின்னணி என்ன ?