India

தொடரும் இனவாதம் : சீனாக்காரன் என்று நினைத்து தாக்கப்பட்ட சிக்கிம் நபர்.. பெங்களுருவில் அதிர்ச்சி !

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வட மாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் கூட சிக்கிம், மிசோராம் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் இருந்தும் வேலைக்காக இருக்கின்றனர். இந்த சூழலில் சிக்கிமை சேர்ந்த தினேஷ் சுப்பா (Dinesh Subba). 31 வயதான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மாத குழந்தை உள்ளது.

இதனால் தினேஷ், தனது குடும்பத்துடன் பெங்களுருவில் வசித்து வரும் நிலையில், நகர உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 15 - 16 இரவு நேரத்தில் தினேஷ், தனது நண்பர்களுடன் பார்ட்டி செய்து விட்டு நள்ளிரவில் தனியாக வீடு திரும்பியுள்ளார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் இவரிடம் விசாரித்தனர்.

யார் என்ன என்று விசாரிக்கையில், தினேஷ் ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்துள்ளார். இதனால் அவரை சீனர் என்று நினைந்து அந்த கும்பல் தாக்க தொடங்கியுள்ளது. மேலும் சீனாவை சேர்ந்தவனே வெளியேறு என்று அவர்கள் கூறியதாகவும் கூறப்படுகிறது. அதோடு தினேஷை அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

இதில் தினேஷின், கை, மூக்கு, உடல் பாகங்கள் உள்ளிட்டவைகளில் கடும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து இரத்த கோரங்களுடன் சாலை ஓரத்தில் சட்டை இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒருவர், அடிபட்டு கிடந்த தினேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தினேஷ் போலீசார் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிசிடிவி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அந்த கும்பலை தேடி வருகின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் இந்தியாவில் பல பகுதிகளில் வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சீனர் என நினைத்து இந்தியாவில் உள்ள சிக்கிமை சேர்ந்த இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நண்பரின் மகளுக்கு வன்கொடுமை.. அரசு அதிகாரிக்கு துணைபோன மனைவி.. அதிரடி ஆக்ஷன் எடுத்த டெல்லி அரசு !