India

”English படிக்கணும்..” : 77 வயதில் 9-ம் வகுப்பு.. 3 கி.மீ நடந்தே பள்ளி செல்லும் முதியவர் - பின்னணி என்ன?

மியான்மர் எல்லையில் கடந்த 1945-ல் குவாங்லெங் (Khuangleng) என்ற கிராமத்தில் பிறந்தவர் லால் ரிங்தாரா. தனது 2 வயதிலே தன்னுடைய தந்தையை இழந்தார். இதனால் தாய்க்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, தனது பள்ளி படிப்பை 2-ம் வகுப்போடு முடித்துக் கொண்டார்.

அதன்பிறகு பல்வேறு பகுதிகளுக்கு தனது தாயோடு இடம்பெயர்ந்த இவர், 1995-ம் ஆண்டு மிசோராம் மாநிலம் ஹ்ருவைகான் (Hruaikawn) என்ற கிராமத்திற்கு வந்தார். பிறகு அங்கேயே தனது புதிய வாழ்க்கையை தொடங்கிய இவர், பாதுகாவலாராக பணிபுரிந்து வந்தார்.

இருப்பினும் தனது படிப்பை பற்றிய கனவுகள் இவருக்குள் இருந்துள்ளது. இதனால் தனக்கு 70 வயதை தாண்டிய பிறகு கடந்த 2018-ம் ஆண்டு ஹ்ருவைகான் கிராமத்தில் இருக்கும் RMSA பள்ளியில் சேர்ந்தார். அங்கே தனது 5-ம் வகுப்பை முடித்த இவர், அந்த பள்ளியில் இருந்து வெளியேறினார்.

பின்னர் தனது படிப்பை தொடர எண்ணிய இவர், 8-ம் வகுப்பு வரை வேறொரு பள்ளியில் படித்து மீண்டும் RMSA பள்ளியில் 9-ம் வகுப்புக்கு சேர்ந்தார். தற்போது இவருக்கு 78 வயதாகும் நிலையில், அவரது வீட்டில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரம் வரை தினமும் நடந்தே பள்ளிக்கு சென்று படித்து வருகிறார்.

இதுகுறித்து முதியவர் லால் ரிங்தாரா கூறுகையில், தனக்கு மிசோ மொழியில் பேசவும், எழுதவும் தெரியும் எனவும், ஆனால் ஆங்கிலத்தில் எழுத பேச வேண்டும் என்று விருப்பபட்டதாகவும், அதற்காக பள்ளிக்கு சென்று படித்து வருவதாகவும் தெரிவித்தார். அதோடு ஆங்கிலம் படிக்க எழுத தெரிந்தால்தான் ஆங்கிலத்தில் விண்ணப்பிக்க முடியும் என்றும், செய்திகளை ஆங்கிலத்தில் தெரிந்துகொள்ள முடியும் என்றார்.

இது போன்ற ஒரு விசயத்தை ஊக்குவிப்பதில் தங்களுக்கு பெருமை என்றும், இதில் தாங்களும் ஒரு பங்காக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகவும் அந்த பள்ளியின்ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் வெளியான இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

குடும்ப சூழ்நிலை காரணமாக தனது படிப்பை 2-ம் வகுப்போடு முடித்துக்கொண்ட மிசோராம் முதியவர் ஒருவர் தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்து வரும் செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: “3ம் வகுப்புக்கு மேல படிக்கக்கூடாது..” பெண்களுக்கு எதிராக தாலிபான் அதிர்ச்சி உத்தரவு: உலக நாடுகள் கண்டனம்