India

போலி பத்திரப்பதிவு தயாரித்து கோயில் நிலத்தை அபகரித்த பாஜக MLAக்கள் : கைது செய்ய வலியுறுத்தும் CPI கட்சி!

புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக ரூ.12 கோடியில் 64 ஆயிரம் சதுரடி நிலம் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகரில் உள்ளது. இந்நிலத்தைக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்த சென்னையைச் சேர்ந்த தம்பதி, புதுச்சேரி சார்பதிவாளர் உள்ளிட்ட 16 பேரை சிபிசிஐடி போலிஸார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே இந்த இடத்தின் ஒரு பகுதியைக் காமராஜர் நகர் தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதேபோல் இவருடைய மகன் நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட்டும் கோவில் நிலத்தை தன்னுடைய மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கோவில் நிலத்தைப் போலி பத்திரம் தயாரித்துப் பதிவு செய்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் அவருடைய மகன் ரிச்சர்ட்டை கைது செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், ரிச்சர்ட் மற்றும் நில மோசடிக்கு உடைந்தையாக இருந்து தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள மாவட்ட பதிவாளர் ரமேஷ் மற்றும் வட்டாட்சியர் பாலாஜி ஆகியோரை உடனடியாக கைது செய்திட வேண்டும், கோவில் நிலத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்பில் காமராஜ் நகர் தொகுதி 45 அடி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Also Read: ” வெறுப்பு பேச்சை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது ”: ஹரியானா அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!