India

”Go back Mr Crime Minister” : பிரதமர் மோடிக்கு எதிராக புனே நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்!

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த வன்முறை நடந்து வருகிறது.

மேலும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து அவையை ஒத்திவைத்து வருகிறது.

அதோடு பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஏன் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாமல் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது. இதற்காக அவர் நாளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு வருகை தருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புனே நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், "கோ பேக் மிஸ்டர் கிரைம் மினிஸ்டர் என்றும் மிஸ்டர் பிரதமேரே மணிப்பூருக்குச் செல்லுங்கள், பாராளுமன்றத்தை எதிர்கொள்ளுங்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம்.. ஒன்றிய அரசு தகவலால் அதிர்ச்சி: பா.ஜ.க ஆளும் மாநிலம் முதலிடம்!