India

40 அடியில் கேட்ட அழு குரல்.. 150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: விளையாடிக் கொண்டிருந்தபோது சோகம்!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது குல் என்ற கிராமம். இங்கு தண்ணீருக்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. ஆனால் அதனை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இந்த சூழலில் அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 3 வயது ஆண் குழந்தை சிவம் என்பவரை அழைத்துக்கொண்டு வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது நிலத்தில் வேலை பார்த்ததால், தனது குழந்தையை அருகில் இருக்கும் வேறொரு இடத்தில் விட்டுள்ளார் சிறுவனின் தாய். அந்த சமயத்தில் சிறுவன் விளையாடி கொண்டிருந்தார். விளையாடி கொண்டிருந்த சமயத்தில் அங்கு அமைக்கப்பட்டிருந்த சுமார் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

விழுந்த சிறுவனின் அழுகை குரல் கேட்கவே, சிவமின் தாய் சுற்றிலும் தேடியுள்ளார். பின்னரே சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு தீயணைப்புத்துறை உள்ளிட்ட மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் சிறுவனை மீட்கும் பணியில் இறங்கினர்.

அப்போது சிறுவன் 40 - 50 அடி ஆழத்தில் சிக்கி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனுக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதையடுத்து மீட்கும் பணியில் தீவிரமாக மீட்புக்குழு இறங்கினர். தொடர்ந்து பாட்னாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பக்கவாட்டில் குழி தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுமார் 9 மணி நேர தீவிர முயற்சிக்கு பிறகே 3 வயது சிறுவன் சிவம், பத்திரமாக மீட்கப்பட்டார். தற்போது சிறுவனுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறை தோண்டிய விவசாயி அதனை மூடாமல் விட்டதே இதற்கு காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

கடந்த மாதம் கூட மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும், மூச்சு திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சைதாப்பேட்டை ரயில் நிலைய பெண் வியாபாரி கொலை வழக்கு.. தங்கை உட்பட 5 பேர் அதிரடி கைது - பின்னணி என்ன ?