India
ஒரே மாதத்தில் தக்காளி விற்றே கோடீஸ்வரர் ஆன விவசாயி.. அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள் !
பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக இந்தியா முழுவதும் பெட்ரோல் விலையை விட ஒரு கிலோ தக்காளி அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தக்காளி விலை குறைக்க ஒன்றிய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த சூழலில் விவசாயி ஒருவர் தக்காளி விற்று 1 மாதத்திற்குள் கோடீஸ்வரர் ஆன நிகழ்வு அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் துக்காராம் பாகோஜி கயாகர். விவசாயியான இவருக்கு சொந்தமாக 18 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 12 ஏக்கரில் தக்காளி போட்டு தனது மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்த சூழலில் தற்போது தக்காளி விலை உயர்வால் மக்கள் பாதிக்கபட்டு வரும் நிலையில், இவர் அதனை வியாபாரம் செய்து சம்பாதித்துள்ளார். இவரது நிலத்தில் இருந்து சுமார் 13,000 பெட்டி தக்காளி அறுவடை செய்து விற்றுள்ளார். இப்படியே தொடர்ந்து 1 மாத காலமாக விற்று வந்த இவருக்கு இதில் இருந்து சுமார் ரூ.1.5 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளது.
நாள் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 15 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளார். குடும்பமாக சேர்ந்து உழைத்ததற்கான பலன் என்று விவசாயி துக்காராம் பாகோஜி தெரிவித்துள்ளார். இது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
முன்னதாக இதே போல் கர்நாடகாவில் விவசாயி 2 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை செய்து 38 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். மேலும் ஆந்திராவில் தக்காளி விற்று ரூ.30 லட்சம் லாபம் பார்த்த விவசாயி மர்ம நபர்களால் கை, கால்கள் கட்டப்பட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!