India

கணவன் மனைவியை பிரித்த இரண்டு தக்காளி.. காவல் நிலையம் சென்ற பஞ்சாயத்து: அடுத்து நடந்தது என்ன?

பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக இந்தியா முழுவதும் பெட்ரோல் விலையை விட ஒரு கிலோ தக்காளி அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

மேலும் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் தக்காளி விலை உயர்வால் குற்றச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கூடுதலாக தக்காளி போட்டு சமைத்ததால் கணவனை விட்டு மனைவி பிரிந்து சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாஹ்டோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் பர்மன். இவர் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு மனைவிக்குத் தெரியாமல் கூடுதலாக இரண்டு தக்காளியைச் சேர்த்துச் சமைத்துள்ளார்.

இதுபற்றி அறிந்த அவரது மனைவி, என்னிடம் ஏன் சொல்லாமல் இப்படிச் சமைத்தீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த அவரது மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவர் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி புகார் அளித்துள்ளார். இதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு அவர் குறித்து விசாரித்தபோது அவர் சகோதரி வீட்டிற்குச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. பிறகு இருவரிடமும் போலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Also Read: கால்நடைத் தீவன முறைகேடு.. 9 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் பாஜக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை !