India

பொம்மை கேட்டதால் கோபம்.. போதையில் மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை.. ம.பி-யில் அதிர்ச்சி !

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ராகேஷ். 37 வயதுடைய இவர், தச்சு தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அந்த பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. இந்த தம்பதிக்குள் 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. மிகவும் ஏழ்மையில் இருக்கும் ராகேஷ், குடிபோதைக்கு அடிமையாக இருந்துள்ளார்.

எனவே தினமும் குடித்து விட்டு குடும்பத்தில் தகராறு செய்ததோடு மனைவியை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ராகேஷை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் தனது மகளை மனைவியோடு அனுப்பாமல் தன்னுடனே வளர்த்து வந்துள்ளார். இருப்பினும் மகள் இருக்கிறார் என்று குடி பழக்கத்தையும் ராகேஷ் விடவில்லை.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே இந்த சிறுமி தனது தந்தையிடம் பொம்மை கேட்டுள்ளார். ஆனால் ராகேஷோ வாங்கி தராமல் இருந்துள்ளார். இதனால் சம்பவத்தன்று சிறுமி தனக்கு பொம்மை, சாக்லேட் வேண்டும் என்று அழுது அடம்பிடித்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த ராகேஷ் இதனால் மிகவும் எரிச்சலடைந்துள்ளார்.

எனவே சிறுமியை கத்தி அதட்டியுள்ளார். இருப்பினும் சிறுமி அழவே கோபமடைந்த ராகேஷ், தனது மகள் என்றும் பாராமல் தனது மகளை பாழடைந்த கட்டடத்திற்கு கூட்டி சென்று சிறுமியின் தலையை அங்கிருந்த டைல்ஸ் மற்றும் கற்களை கொண்டு மோதி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல் இருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறுமியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். பொம்மை கேட்டதால் கோபப்பட்ட போதை தந்தை மகளேயே கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஒடிசா ரயில் விபத்து.. இறந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்ட இளைஞர்.. 230 கிமீ பயணித்து மகனை மீட்ட தந்தை!