India

அடுத்தடுத்து மோதிய 3 ரயில்கள்.. நொறுங்கிய பெட்டிகள்.. கொடூர விபத்தில் 280 பேர் பலி, ஏராளமானோர் படுகாயம்!

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் ஒரே பாதையில் வந்ததால் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

அதோடு, இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 - 8 பெட்டிகள் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த பாதையில் விழுந்துள்ளது. அப்போது அந்த பாதையில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் இந்த ரயிலின் மீது மோதியதாகவும் யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயிலின் 2 - 3 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைக்கு பின்னரே முழு விவரமும் தெரியவரும்.

மனித தவறுகள் காரணமாகவோ அல்லது சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், உடனடியாக மீட்புப் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவம் அறிந்து முதலில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்புப்பணியில் உடனடியாக களமிறங்கினர். அதோடு சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் உடனடியாக அந்த பகுதிக்கு மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில் பயணம் செய்த ஏராளமான பயணிகள் உயிரிழந்தனர். மேலும், ரயில் பெட்டிகளும் பயங்கர சேதமடைந்துள்ள நிலையில், அதில் ஏராளமானோர் சடலமாக மீட்கப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதோடு படுகாயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் தற்போதுவரை 280 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளாதாகவும் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த தகவலை ஒடிசா தலைமை செயலரும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விபத்து நடைபெற்றுள்ள இடத்துக்கு ராணுவத்தினரும் மீட்புபணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

Also Read: மகனுக்கு பெண் பார்க்க சென்ற பெற்றோர்.. குறுக்கே வந்த சரக்கு வாகனம்: அடுத்த நடந்த அதிர்ச்சி சம்பவம்!