India

தொடரும் மரணங்கள்.. கைக்கழுவும்போது நீருக்குள் தவறி விழுந்த சிறுவன் பலி: சுற்றுலா வந்த போது நேர்ந்த சோகம்!

கேரளா மாநிலம் வெள்ளறடை பகுதியை சேர்ந்தவர் முகமது சொலீஹி (13) . இந்த சிறுவன் தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாவுக்கு கூட்டி செல்லும்படி தனது தந்தையிடம் கூறியுள்ளார். எனவே சிறுவன், தந்தை சம்நாத், உறவினர்கள் என சுமார் 6 பேர் சுற்றுலாவுக்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி சம்பவத்தன்று ஆட்டோவில் கன்னியாகுமரியில் உள்ள சிற்றார் அணை பகுதியை சுற்றிப் பார்க்க சென்றிருந்தனர்.

அப்போது மதிய வேலை ஆகிவிட்டது என்பதால் அனைவரும் சாப்பிட்டு பின்னர் சுற்றி பார்க்கலாம் என எண்ணி, தாங்கள் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்த பிரியாணியை சிற்றாறு அணை -2 சங்கரன் காவு பகுதியில் அணையின் கரையோரம் பாறையின் மேல் அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் முகமது சொலீஹி என்ற சிறுவன், கை கழுவ தன்னுடன் 11 வயது உறவுக்கார சிறுவன் சுகேல் என்பவரையும் அழைத்து சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் அந்த சுகேல் திடீரென நிலைதடுமாறி நீருக்குள் விழுந்துள்ளார். இதனை கண்டதும் பதறிப்போன முகமது சொலீஹி, கத்தி கூச்சலிட்டதுடன் அந்த சிறுவனை காப்பாற்ற முற்பட்டார். அப்போது அவரும் தவறி உள்ளே விழ, இதனை கண்ட உறவினரான நவாஸ் (30) என்பவர், இரண்டு பேரையும் காப்பற்ற முயற்சித்தார். அப்போது சுகேலை மட்டும் மீட்டெடுக்க முடிந்தது. முகமது சொலீஹி என்ன ஆனார் என்பது தெரியாமல் அனைவரும் திகைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர், நீருக்குள் காணாமல் போன சிறுவனை தீவிரமாக தேடினர். தொடர்ந்து தேடினாலும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் மாலை 6 மணி அளவில் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த அருள் (48) என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் அணையின் மிக ஆழமுடைய பகுதியில் இருந்து முகமது சொலீஹி உடலை மீட்டார்.

தொடர்ந்து மீட்கப்பட்ட உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர்கள் உறவினர்கள் கண் முன்னே சிறுவன் நீருக்குள் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இதே போல் பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே நீர்நிலைகளில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: இரவில் செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்த சிறுமி.. திடீரென வெடித்து சிதறியதால் நேர்ந்த சோகம் !