India

காவல்நிலையம் முற்றுகை.. இந்திய அரசுக்கு எச்சரிக்கை.. ஒரு மாதமாக தேடப்பட்டுவந்த அம்ரித்பால் போலிஸில் சரண்!

கடந்த 2021-ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துக் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த டிராக்டர் பேரணியில் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்து, பேரணிக்கு காவல்துறை அனுமதி கொடுத்த வழியில் செல்லாமல், தடுப்புகளை மீறி சென்று கலவரத்தை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பரில் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பை தொடங்கிய நடிகர் தீப் சித்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஹரியாணாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அதன்பின்னர் 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் என்பவர் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து பஞ்சாப் தனிநாடு கோரிக்கையான காலிஸ்தான் கோரிக்கை தீவிரம் அடைந்தது.

அதோடு கடந்த மாதம் 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பை சேர்ந்த ஒருவரை போலிஸார் கைதுசெய்த நிலையில், துப்பாக்கி ஏந்திய ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை அம்ரித்பால் சிங் முற்றுகையிட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் பஞ்சாப் மாநிலத்துக்கு மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 10 கம்பெனிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அம்ரித்பால் சிங் கைதுசெய்யப்பட்டதாகவும் பின்னர் அவர் தப்பிச்சென்றதாகவும் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவாக பல்வேறு வேடங்களில் சுற்றித்திரிந்து வந்தார்.

அவரை கைது செய்ய பஞ்சாப் போலிஸார் பல்வேறு முயற்சிகளை செய்துவந்த நிலையில் இன்று அம்மாநிலத்தின் மோகா போலீசாரிடம் அம்ரித்பால் சிங் சரண் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக கூறியுள்ளனர். அம்ரித்பால் சிங் சரண் அடைந்துள்ளது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "உண்மையைப் பேசுவதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார்" -அரசு பங்களாவை காலிசெய்த ராகுல் காந்தி பேட்டி !