India

பிரான்ஸ் குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் நகை, பணம் கொள்ளை.. போலிஸிடம் சிக்கிய பணிப்பெண்: பகீர் வாக்குமூலம்

புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூபாய் 4 லட்சம் பணம் திருட்டில் ஈடுப்பட்ட பணிப்பெண் மற்றும் அவரது கணவரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்றவர் லட்சுமி (51). இவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, இவர் தனது பள்ளி படிக்கும் மூன்று குழந்தைகள் மற்றும் தனது அத்தையுடன் லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இதனிடையே அவ்வபோது பிரான்ஸ் நாட்டுக்கு சென்று வரும் லட்சுமி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரிக்கு வந்தபோது தனது வீட்டு வேலைக்காக முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி உஷா (37) என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளார். இதற்கிடையே லட்சுமி கடந்த அக்டோபர் மாதம் பிரான்சிக்கு சென்று விட்டு மீண்டும் டிசம்பர் மாத இறுதியில் புதுச்சேரிக்கு வந்தார்.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வீட்டின் அலமாரியில் உள்ள நகைகளை அணிந்து செல்ல முற்பட்டபோது, அலமாரியில் இருந்த தங்க சங்கிலி, நெக்லஸ், வளையல், மோதிரம் உள்ளிட்ட 20 பவுன் நகைகள், ரூ 60,000 ஆயிரம் ரொக்கம், பிரான்ஸ் நாட்டு பணம் 4000 யூரோ (இந்திய மதிப்பு ரூ. 3,60,000) மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் லட்சுமி அளித்த புகாரின்பேரில் போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் வீட்டுப்பணி பெண் உஷா நடவடிக்கைகள் மீது சந்தேகம் அடைந்த போலிஸார், அவரை கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி காவலில் எடுத்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் லட்சுமி வீட்டில் பீரோ சாவி இருந்த இடத்தை அறிந்துகொண்ட உஷா, கடந்த செப்டம்பர் மாதம் முதலே சிறிது சிறிதாக நகை மற்றும் பணத்தை திருடி, தனது கணவர் சுரேஷிடம் கொடுத்தாகவும் அதனை அவர் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விற்று அந்த பணத்தில் புதிய நகைகள் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததது.

இதனைத்தொடர்ந்து சுரேஷை கைது செய்த போலிஸார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து சில நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Also Read: ”மக்கள் குறையைத் தீர்க்கும் தமிழ்நாடு அரசு”.. முதலமைச்சருக்கு பாராட்டு கடிதம் அனுப்பிய ஒன்றிய அமைச்சர்!