India

“பில்கிஸ் பானு வழக்கு உரிய முறையில் மீண்டும் விசாரணை” : சிக்கலில் மோடி அரசு - உச்ச நீதிமன்றம் அதிரடி !

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய மதக் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற பெண்மணியின் மொத்த குடும்பமும் அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் என்ற கிராமத்தில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது பில்கிஸ் பானு, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை, மதவெறியர்கள் ஈவு இரக்கமின்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும், இந்த கலவரத்தின்போது கொல்லப்பட்டனர். மேலும் பில்கிஸ் பானு படுகாயங்களுடன் உயிர்தப்பினார். பின்னர் இதுதொடர்பான வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வழங்கிய தீர்ப்பில், பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

குறிப்பாக அப்போது கருவுற்ற பெண்ணை கூட்டுப்பாலியல் செய்தது, 3 வயது குழந்தையை கொலை செய்தது உள்ளிட்ட வழக்கிகளில் 34 ஆண்டுகள் தண்டணை விதிக்கப்பட்டது. தண்டணை பெற்ற குற்றவாளிகள் 10 முதல் 15 ஆண்டுகள் மட்டும் சிறை தண்டணை அனுபவித்த நிலையில், குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு அண்மையில் விடுதலை செய்ததது. பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சமீபத்தில் கூட குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பில்கிஸ் பானு வழக்கில் கைதான 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து, 11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கே.எம்.ஜோசப், நாகரத்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது , “இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குற்றம் பயங்கரமானது, அதனை அனுதாப உணர்ச்சியால் மூழ்கடித்துவிட முடியாது. வழக்கு உரிய முறையில் சட்டப்படி விசாரிக்கப்படும் என்று உறுதியளித்தனர். மேலும் 11குற்றவாளிகளை முன் கூட்டியே விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்த கோப்புக்களை அடுத்த விசாரணையின் போது குஜராத் அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கும், 11 குற்றவாளிகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பின்னர் இந்த வழக்கு ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Also Read: “100 நாள் வேலைத் திட்டம் இனி 2 வாரங்கள் கூட நடக்காது” : விவசாயத் தொழிலாளர்களை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசு!