India

பழிக்குப் பழி.. மனைவியை காதலித்தவரின் மனைவியை திருமணம் செய்த கணவன்.. பின்னணியில் ஷாக் !

பீகார் மாநிலம் ககாரியா பகுதியை சேர்ந்தவர் நீரஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரூபி தேவி என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணமானது. திருமணம் முடிந்து தற்போது இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், ரூபிக்கு முகேஷ் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

அதே போல் முகேஷுக்கும் ஏற்கனவே திருமணமாகி அதே பெயர் கொண்ட ரூபி தேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். முகேஷுக்கும் நீரஜ் மனைவி ரூபிக்கும் இடையே இருக்கும் பழக்கம் காதலாக மாறவே இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த பழக்கத்தால் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய எண்ணியுள்ளனர்.

அதன்படி நீரஜ் மனைவி ரூபி தேவியும், முகேஷும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து தனது மனைவியை மர்ம நபர்கள் கடத்தியதாக நீரஜ் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்டபோது, ரூபி தேவி, முகேஷுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தாரிடம் இந்த விவகாரம் சென்றது. இதனை பேசி தீர்க்க நீரஜை அழைத்தபோது அவர் வர மறுத்துள்ளார்.

அதோடு இந்த விவகாரத்தை பேசி தீர்க்க முடியாது என்று, அவர்கள் இருவரையும் பழி வாங்க எண்ணியுள்ளார். அதன்படி தனது மனைவியை கூட்டி சென்ற முகேஷின் மனைவி ரூபி தேவியை சந்தித்து அவரிடம் பேசியுள்ளார். பின்னர் நீரஜ் மற்றும் முகேஷின் மனைவி ரூபி தேவி திருமணம் செய்துகொண்டனர். மனைவியை பழிவாங்க கணவர் செய்த இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இவர்கள் திருமணம் அந்த பகுதியிலுள்ள கோயில் ஒன்றில் வைத்து நடைபெற்றுள்ளது. ஆனால் இதில் குழந்தைகள் நிலைமைதான் பரிதாபத்துக்கு உள்ளாகியுள்ளது. முகேஷின் 2 குழந்தைகள், நீரஜின் 1 குழந்தை என 3 குழந்தைகள் நீராஜிடமும், நீரஜின் 3 குழந்தைகளும், முகேஷின் 1 குழந்தையும் முகேஷிடமும் வளர்ந்து வருகிறது.

தனது மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதால், தனது மனைவியை கூட்டி சென்றவரின் மனைவியை திருமணம் செய்து பழிக்கு பழி வாங்கிய பீகார் கணவரின் செயல் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: திரை பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் : தலைமறைவாக இருந்த ஹரிஷை கைது செய்தது தனிப்படை !