India

குடிபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இளைஞர்.. டெல்லி விமானத்தில் நடைபெற்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவம்!

நியூயார்க்கில் இருந்து டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்பவர் அருகில் இருந்த சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் காவல்நிலையத்தில் அதிகாரபூர்வமாக புகார் ஒன்றை அளித்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்னர். மேலும், சங்கர் மிஸ்ரா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அவர் தலைமறைவானார்.

ஆனால், பெங்களுருவில் பதுங்கியிருந்த அவரை போலிஸார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் தற்போதுவரை பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அதேபோல மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்த விமானத்தில் வந்த ஆர்யா வோஹ்ரா ( வயது 21) என்ற இளைஞர், சக பயணி மீது குடிபோதையில் சிறுநீர் கழித்துள்ளார். இது தொடர்பாக சக பயணி டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆர்யா வோஹ்ரா அமெரிக்காவில் உயர் கல்வி படித்து வருவதாகவும், அவர்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் சார்பிலும் இது தொடர்பாக புகாரளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த MLA-க்கள்.. கட்சி தொண்டர்களால் தீ வைக்கப்பட்ட அலுவலகம்.. மேகாலயாவில் பரபரப்பு!