India

துப்பாக்கியால் இளைஞர் சுட்டு கொலை.. காவல் நிலையத்தை சூறையாடிய கிராம மக்கள்.. பீகாரில் அதிர்வலை !

பீகார் மாநிலம் பெகுசரா என்ற பகுதியை அடுத்துள்ளது பக்வான்பூர் என்ற கிராமம். இந்த கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் சாலையோரத்தில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்திருந்துள்ளார். அப்போது அங்கே வழிப்போக்கர் ஒருவர் சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் இந்த இளைஞருக்கும், அந்த நபருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அந்த வழிப்போக்கர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலே சுருண்டு விழுந்த அவர், இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பூதாகரத்தை கிளப்பிய நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை தீவிரம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கார் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர்.

இதையடுத்து இதுகுறித்து தகவல் மேலதிகாரிகளுக்கு தெரிய வரவே அவர்கள் கலவர இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இளைஞரின் கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு குற்றம்சாட்டப்பட்டவரை விரைந்து கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கிராம மக்கள் சிலர் காவல் நிலையத்தைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக வெளியான வீடியோவில் இந்த தாக்குதலில் 2-3 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

இந்த சம்பவத்தால் பீகாரில் உள்ள அந்த கிராமத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு செயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read: இன்னோவா கார்.. CCTV-யில் பதிவான காட்சி : பெரம்பூர் நகைக்கடை கொள்ளையர்களை நெருங்கும் தனிப்படை போலிஸார்!