India

உடல் முழுவதும் காயம்.. சூடுவைத்து சித்ரவதை: வேலைக்கு அழைத்து வந்து சிறுமியைக் கொடுமைப் படுத்திய தம்பதி!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிஷ் கட்டார். இவரது மனைவி கமல்ஜீத் கவுர். இந்த தம்பதியினர் தங்களது வீட்டு வேலைக்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை அழைத்து வந்துள்ளனர்.

பின்னர், அச்சிறுமியை அதிகமாக வேலை வாங்கி உணவு கொடுக்காமல் கொடுமை படுத்தி வந்துள்ளனர். மேலும் உடல் முழுவதும் சிறுமிக்குச் சூடுவைத்துள்ளனர். பல நாட்கள் உணவு கொடுக்காததால் குப்பைத் தொட்டியில் இருந்த எஞ்சிய உணவுகளைச் சிறுமி சாப்பிட்டு வந்துள்ளார்.

இதுபற்றி தொண்டு நிறுவனத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் போலிஸாரை அழைத்துக் கொண்டு மணிஷ் கட்டார் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் சிறுமியிடம் விசாரித்தபோது தம்பதிகளின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் சிறுமி பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்குச் சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தம்பதிகள் மணிஷ் கட்டார் மற்றும் கமல்ஜீத் கவுரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து மணிஷ் கட்டார் வேலைபார்த்து வந்த இன்சூரன்ஸ் நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது.

Also Read: துருக்கி - சிரியா : பூகம்பத்தின் நடுவே பிறந்த அதிசய பெண் குழந்தை.. தத்தெடுக்க ஆர்வம் காட்டும் மக்கள்..!