India

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபர்.. கைவிரலை கடித்து துண்டாக்கிய சிங்கப்பெண்.. உ.பி.யில் பரபரப்பு !

உத்தரப் பிரதேச மாநிலம் கவுசாம்பி என்ற பகுதியில் உள்ள மயோஹார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நீட்டா தேவி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அருகே உள்ள சந்தைக்கு சென்று வீட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் இதரப்பொருள்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவரின் கழுத்தில் நகை மற்றும் கையில் பணம் போன்றவை இருப்பதை அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கவனித்துள்ளார். பின்னர் நீட்டா தேவியை பின்தொடர்ந்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளார்.

அப்போது அந்த நபர் நீட்டா தேவி கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் அவரின் கையிலிருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார். மேலும், அவரிடம் தவறாக நடக்கவும் முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்த அந்த பெண் கூக்குரலிட்டு உதவி கேட்ட நிலையில், அந்த நபர் அவரின் வாயை கையால் மூடியுள்ளார்

அப்போது நீட்டா தேவி அந்த நபரின் விரலை கண்டித்துள்ளார். பின்னர் அந்த நபர் நீட்டா தேவியை தள்ளிவிட முயன்ற நிலையிலும் விடாத அந்த பெண் அந்த நபரின் விரலை கடித்து இரு துண்டாக்கியுள்ளார். இந்த தருணத்தில் அந்த பகுதியில் ஆட்கள் கூடிய நிலையில், அந்த நபர் அங்கிருந்து ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் பெண்ணின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும், திருட்டு செயலில் ஈடுபட நபரை விரைவில் கைது செய்வோம் எனவும் போலிஸார் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: “நோட்டாவோடு போட்டி போடுபவர்களுக்கு வாய்ச்சவடால் எதற்கு?” - அண்ணாமலையை வெளுத்து வாங்கிய DMK IT Wing !