India

நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தேவைப்பட்ட பணம்.. Costly Bike-ஐ திருடி விற்ற 2 வாலிபர்கள்: போலிஸ் ஷாக்!

புதுச்சேரி சின்ன காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து உள்ளார். பிறகு வீட்டிற்கு சென்றுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது வாகனம் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது தொடர்பாக முருகன் காலாபட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு பேர் வாகனத்தைத் திருடிச் செல்லும் காட்சிப் பதிவாகி இருந்தது.

இதையடுத்து, அந்த இரண்டு பேரும் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் ஆகாஷ் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாகத் தலைமறைவாக இருந்த இருவரையும் போலிஸார் திண்டிவனத்தில் கைது செய்தனர். பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையில், மணி மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் நீதிமன்ற செலவிற்கு அவருக்கு பணம் தேவைப்பட்டுள்ளது.

இதனால் மணி விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருட முடிவெடுத்துள்ளார். இதற்கு ஆகாஷ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இதையடுத்துத்தான் இருவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தை திருடி விற்பனை செய்து பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை போலிஸார் மீட்டனர். பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Also Read: தவமிருந்து பெற்ற குழந்தைக்கு நிமோனியா.. குணமாக்க மூடநம்பிக்கையில் பெற்றோர் செய்த செயலால் நேர்ந்த சோகம் !