India

உயிருடன் வந்த காணாமல் போன சிறுமி.. கொலை வழக்கில் 7 ஆண்டுகள் சிறையில் இருந்த இளைஞர்.. உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சிறுமி ஒருவர் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், சிறுமியை கடைசியாக விஷ்ணு கவுதம் என்பவருடன் பார்த்ததாகவும் கூறினர்.

அதன்பின்னர் சிறிது நாட்களுக்கு பின்னர் அடையாளம் தெரியாத சிறுமியின் உடலை போலிஸார் கண்டுபிடித்தனர். அந்த சிறுமியின் உடல் தங்கள் மகளின் உடல்தான் என காணாமல்போன சிறுமியின் பெற்றோர் கூறியதால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

மேலும், சிறுமியின் உறவினர்கள் புகாரின்பேரில் விஷ்ணு கவுதம் என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டு அவர்தான் கொலைசெய்தார் என ஆதாரம் திரட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் வெளிவந்த நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிடவே அந்த இளைஞர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அந்த இளைஞரின் தாயாருக்கு காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி திருமணம் செய்து, கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஆக்ராவில் வசித்து வந்தது தெரியவந்தது. பின்னர் சில அமைப்பினரின் உதவியோடு சிறுமியை இளைஞரின் பெற்றோர் கண்டுபிடித்தனர்.

பின்னர் இது தொடர்பாக காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் தற்போது திருமணம் செய்து வாழ்ந்து வரும் காணாமல் போன அந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்திவருகின்றனர். அவருக்கு மரபணு சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: யானை சிலையின் கீழ் சிக்கிக்கொண்ட நபர்..கோயிலில் பரிகாரம் செய்ய முயன்றவருக்கு நேர்ந்த சோகம்: வைரல் வீடியோ!