India

மயக்க மருந்து கலந்த ஆப்பிள் கொடுத்து சிறுமிகள் வன்கொடுமை.. கர்நாடகாவை உலுக்கிய மடாதிபதியின் கொடூரங்கள்!

கர்நாடகாவில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, மேலும் பல சிறுமிகளை வன்கொடுமை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் முருக மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருக சரணரு. இவரது மடம் சார்பில் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பல்வேறு மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேரை, மடாதிபதியாக சிவமூர்த்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து மடாதிபதி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள், நேற்று இரவு அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மடாதிபதிக்கு உடந்தையாக இருந்ததாக அந்த பள்ளியின் வார்டன் ராஷ்மி, பசவதித்தியா, பரமசிவன், கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மடாதிபதி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தொடர்பாக தேசிய குழந்தைகள் ஆணையம், தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து, விசாரணையை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். அதில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு இந்த இரண்டு சிறுமிகள் மட்டுமின்றி பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு இரவில் சிறுமிகளை மடாதிபதிக்கு அந்த பள்ளியின் வார்டன் ராஷ்மி மற்றும் வேறொரு நபரும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமிகளை மிரட்டி மடத்தின் அலுவலகம், படுக்கையறை, கழிவறை என பல இடங்களில் வைத்து வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மடாதிபதிக்கு மாணவிகள் ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஆப்பிளில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்கமுற செய்தபின் சாமியார் வன்கொடுமை செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த அறிக்கை தற்போது கர்நாடகாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.